தென்தமிழகக் கடற்கரையோர திமிங்கலச் சாவுகள் ஏன்?

திமிங்கலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கி தற்கொலை செய்து கொள்வது அவ்வப்போது உலகில் பல பகுதிகளில் நடப்பது தான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி பகுதியிலும் இது நடந்திருக்கிறது. Mass Stranding மற்றும் Beaching என்றெல்லாம் இதற்கு வேறு பெயர்கள் உண்டு. இந்தியக் கடற்கரைகளில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் இது நடந்திருக்கிறது. வருடத்துக்கு ஒரு நிகழ்வாவது இம்மாதிரி நடப்பதுண்டு.
ஏன் இவை இப்படிக் கூட்டமாய் தங்களை மாய்த்துக் கொள்கின்றன என்பது குறித்து தெளிவான முடிவுகள் இல்லை. ஆனால் இந்நிகழ்வுகள் நடந்த சூழல் குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் நிறைய காரண காரியங்களைக் கூறுகிறார்கள்.
1. திமிங்கலங்கள் கூடமாய் வாழும். நாற்பது அம்பது சேர்ந்து இருக்கும் ஒரு கூட்டத்துக்கு pod என்று பெயர். பெரிய pod இல் நூறு வரை இருக்கலாம். மில்லியன் கணக்கில் இருக்கும் சின்ன மீன் தொகுதிகளோடு ஒப்பிடும் போது திமிங்கலக் கூட்டத்தின் எண்ணிக்கை சிறியது தான். கூட்டத்துக்கு ஒரு தலைவன் இருப்பான். சிலநேரங்களில் தலைவர் தவறான வழியில் சென்றால் மற்றவர்களும் அதனைத்தொடர்ந்து செல்வதால் இது போன்று ஏற்படுகிறது.
2. கூட்டத்தின் தலைவனுக்கு உடல் உபாதை ஏற்படும்போது, தளர்ச்சியடைந்து, ஆழ்கடலில் தாக்குப் பிடிக்க முடியாமல் கரையை நோக்கி வரும். ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, தலைவனைப் பின்பற்றி மற்ற திமிங்கலங்கள் கரையை நோக்கி நீந்தி வரும்.
3. ஆழ்கடலில் கடலதிர்வு (Sea Quake ) ஏற்படும்போது அதன் ஓசை மற்றும் பிற மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டு அல்லது பயந்து வேறு திசையில் வேகமாகப் பயணிக்கும்போது இதுபோன்று ஏற்படும்.
4. ஆழ்கடலுக்கு மட்டுமே அதன் உடல் உகந்தது. கரையை நோக்கி வர வர தண்ணீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் அதனால் தாக்குப் பிடிக்க முடியாது. அதுபோலவே கரைப் பகுதியில் அடிக்கும் பெரும் அலைகளையும் அவற்றால் தாக்குப் பிடிக்க முடியாது. எனவே ஆழ்கடலில் இருந்து நடுக்கடலுக்கு வந்தாலே ரிஸ்க் தான். அதையும் தாண்டி Shallow seas க்கு வந்துவிட்டால் மீனவர்களின் உதவியுடன் அவை திருப்பி விடப்படவிட்டால் சாவு நிச்சயம்.
5. நேற்றைய நிகழ்வில் செத்துக் கிடக்கும் திமிங்கலங்களைப் பார்த்தால் அவை Pilot ரகம் போன்று எனக்குத் தெரிகிறது. பைலட் அதிகளவு ஆழ்கடலில் மட்டுமே இருக்கும் திமிங்கலம். Orca எனப்படும் Killer Whales கரையிலும் கொஞ்சம் தாக்குப்பிடித்து திரும்பப் போகும். மேற்கூறிய காரணங்களில் ஏதோ காரணத்தால் ஆழம் குறைந்த பகுதிக்கு வந்து நாட்கணக்கில் அவஸ்தைப் பட்டு மாண்டு கரையில் ஒதுங்கியிருக்கும். சிலவற்றை மீனவர்களும் அரசும் இணைந்து கடலுக்குள் திருப்பி விட்டிருக்கிறார்கள்.
6. கூடங்குளம் அணு உலைக் கழிவால் இது நடந்திருந்தால் ஆழ்கடலில் இருக்கும் ஒரே ஒரு மீனை மட்டும் அது பாதிக்காது. கோடிக்கணக்கில் கடல்மீன் செத்து மிதந்திருக்கும். அது மட்டுமின்று மீனவர்களால் திருப்பி விடப்பட்ட திமிங்கலங்கள் பாதுகாப்பாக திரும்பிச் சென்றதன் மூலம் இவை Stranding அல்லது Beaching என்றே கொள்ள முடிகின்றது.
பின்குறிப்பு:
அணுஉலை பாதுகாப்பு தனி டாபிக். இரண்டையும் இந்த நேரத்தில் கலக்கிறோம் என்றே தோன்றுகிறது. ஒரு சின்ன மழை பெருமழையாக உருவெடுத்து 500 பேரைக் காவு வாங்கி நீர்நிலைகளைத் திணறச் செய்தபோது ஒன்றுமே செய்யாத அரசுகள் அணு உலையில் ஏதாவது நடந்தால் மக்களைக் காப்பாற்றும் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு Two Minute Silence :)

சிகாடாவும் பகோடாவும் !!!


இரு வாரங்களுக்கு முன்னாள் ஒருநாள் அலுவலக நண்பர் மதிய இடைவேளை நேரத்தில் சொன்னார்.

" வெளில நெறைய சிகாடா வந்திருச்சி. பாத்தீங்களா? "

சுத்தமாக மறந்து போயிருந்தேன். சிகாடாக்கள் வரப்போகின்றன என்பது குறித்தான செய்திகளை படித்திருந்தேன். ஆனாலும் கவனிக்கவில்லை. நண்பர் சொன்னவுடன் தான் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து மரங்களைக் கவனித்தேன். எங்கு நோக்கினும் சிகாடாக்கள்.

என்ன இது பகோடா மாதிரி ஒரு சிகாடா ன்னு கேக்குறீங்களா? . இருங்க சொல்றேன்.




மேலே இருக்கிற படத்துல இருக்கிறது தான் சிகாடா. இதுல ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் variety இருக்கு. இதுல நான் சொல்ற சிகாடாவின் பெயர் மேஜிக் சிகாடா. பெயர் கூட எவ்வளவு பொருத்தம் என்று  பின்னர் புரிந்து கொள்வீர்கள்.

சிகாடாக்கள் வசந்த காலத்தின் முடிவில், கோடைக் கால துவக்கத்தில் மண்ணில் இருந்து வெளியே வரும். தரையெங்கும் நிறைய துளைகள் போட்டு அதில் இருந்து பல மில்லியன் பூச்சிகள் வெளியே வரும்.

ஆண் பூச்சியும் பெண் பூச்சியும் சேர்ந்து இனப் பெருக்கம் செய்து, ஒவ்வொரு பெண்ணும் ஆயிரக்கணக்கில் முட்டைகள் இட்டு மரத்தடியிலும் கிளைகளிலும்  வைக்கும்.

இந்த முட்டைகள் பொரித்து சிறிய குஞ்சாக மாறி பின்னர் மரத்தில் இருந்து விழுந்து விடும். கீழே விழுந்த இந்த சின்னஞ் சிறுசுகள் மண்ணுக்குள் மெதுவாகச் சென்று விடும். பின்னர் மண்ணுக்குள் தான் வாழ்க்கை. தாவரங்களின் வேரில் இருந்து ஜூஸ் குடிச்சு வாழும். ஒரு "குறிப்பிட்ட காலம்" முடிந்ததும் நான் கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல மண்ணில் துளை போட்டு வெளியே வரும்.

இதுல என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா?

இந்த மண்ணுக்குள் வாசம் செய்யும் நாட்கள் ஒவ்வொரு இன சிகாடாவுக்கும் வேறுபடும். சில பூச்சி இனங்கள் ஒரு வருடத்தில் வெளிவரும். சில இரண்டு மூன்று என்று வேறுபடும்.

வட அமெரிக்கப் பகுதிகளில் வெளிவரும் நான் பார்த்த இந்த சிகாடாக்கள் 17 வருடத்துக்கு ஒருமுறை தான் வெளியே வரும். சில இனங்கள் 13 வருடத்துக்கு ஒரு முறை.

17 வருடங்கள் தாவரங்களின் வேரில் இருந்து உணவு உட்கொண்டு வெளியே என்ன நடக்கிறது தெரியாமலே பூமிக்குள் உறைவிடம் கொண்டு ,  அதன் பருவம் வந்த உடன் மிகச் சரியாக வெளியே வருகிறது என்பது தான் இதில் வியக்கத்தக்க விஷயம். எப்படி இந்த சுழற்சி முறையை இந்தப் பூச்சிகள் இத்தனை வருடங்களுக்கு ஒருமுறை சரியாகச் செய்கின்றன  என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.





அலுவலகத்துக்கு வெளியே மரத்தில் இருந்த சிகாடாக்கள்
அதீத நகரமயமாக்கலின் விளைவால் 17 வருடங்களுக்கு முன் ஒரு காட்டுக்குள் விழுந்து மண்ணுக்குள் போன ஒரு சிகாடா குஞ்சொன்று இன்று மண்ணிலிருந்து வெளிவருவது ஒரு நகர்ப்புற வீட்டின் முன்பாக இருக்கலாம்.

ஆண் பூச்சிகள் இனப்பெருக்கத்துக்காக பெண் பூச்சிகளை கவர ஒரு வித்தியாசமான ஓசை ஒன்றை வெளிப்படுத்துகிறது. இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கான பூச்சிகள் அதிக அளவு டெசிபலில் கத்துவதால் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாலே காது அடைக்கிறது. இதனை சிகாடா பாட்டு (cicada  song ) என்று கூறுகிறார்கள்.


நியூ ஜெர்சியில் பூச்சிகளின் வருகை குறித்த செய்தித் துணுக்கு


பூச்சிகளை உண்ணும் பறவைகளுக்கும் மற்ற ஊர்வனவைக்கும் இது விருந்து காலம். முட்டை போட்டு அடுத்த தலைமுறைக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தவுடன் சிகாடாக்கள் நிம்மதியாக கண்மூடிவிடும். பறவைகளும் மற்ற பூச்சிகளை உண்ணும் ஊர்வன போன்றவை இந்தப் பூச்சிகளை தின்று தீர்க்கும்.

சரி தலைப்புக்கு வருவோம். விஷயம் என்னன்னா Cicadas are  Edible :)

அதனால் இந்தப் பகுதிகளில் சிலர் அதனைச் சாப்பிடுகிறார்கள். கீழே இருக்கிற படத்துல இருக்கற மாதிரி நல்ல மொறு மொறுன்னு பக்கோடா மாதிரி எங்கயாவது சிகாடா கெடைக்குமான்னு பாக்குறேன். விசாரிச்ச வரையில் எந்த ஹோட்டலிலும் இல்லை. 17 வருடங்கள் தாண்டி இனியொருமுறை சிகாடாவை நான் பார்ப்பேனா என்று தெரியாது. அதற்குமுன் எப்படியாவது சிகாடா  பக்கோடா சாப்பிடவேண்டும் :)



Deep  Fried Cicada :)
 

மேலதிக தகவல்கள்:

1. சிகாடாக்கள் குறித்த விக்கி பக்கத்துக்கு இங்கே சுட்டவும்.

2. மேஜிக் சிகாடாக்கள் குறித்த விக்கி பக்கத்துக்கு இங்கே சுட்டவும்.

3. எங்கெல்லாம் சிகாடக்கள் பார்க்கலாம் போன்ற லோக்கல் தகவல்களுக்கு இங்கே செல்லவும்.



பிரான்சால் பாராட்டப்பட்ட ஜிஹாத் !!!

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி!  ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவர் பின்னர் ஒரு நாள் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும் பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல. இந்த இரண்டு நேரெதிர் எல்லைக்கும் சென்றது அவரது தாய்நாட்டை ஆக்கிரமித்த எதிரி நாடு. எதிரியால் தூற்றப்படுவது வழமை தான். ஆனால் எதிரியால் கொண்டாடப்படுவது என்பது வரலாற்றில் அனுதினமும் நடக்கும் நிகழ்வல்ல.
 
அமீர் அப்துல் காதிர் அல் ஜசாயிரி. வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1808 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியர்களை ஹிந்த் என்றும், அல்பேனியர்களை அல்பானி என்றும்அழைப்பது போன்று அரபியர்கள் அல்ஜீரியர்களை அல் ஜசாயிரி என்று அழைப்பார்கள். அப்துல் காதிர் இளம் வயதிலேயே புனித குரானை மனனம் செய்து இஸ்லாமியக் கல்வியையும் கற்று அந்தப் பகுதியின் மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார். 





1825 ஆம் ஆண்டு மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுவிட்டு, பல்வேறு அரபு நாடுகளில் பிரயாணம் செய்து விட்டு பல வருடங்கள் கழித்து நாடு திரும்பியவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. தாய்நாடான அல்ஜீரியாவை பிரஞ்சுப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. இன்று உலகில் நல்லவர்கள் என்பதுபோல் காட்டிக்கொள்ளும் ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் உலகம் முழுவதும் நிகழ்த்திய கொடூரங்கள் எண்ணிலடங்காதவை. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நிகழ்த்திய கொடூரங்கள் போன்று அல்ஜீரியாவில் பிரஞ்சுப் படைகள் சொல்லொணாத் துயரங்களை நிகழ்த்தின.

உலக வரலாற்றுப் புத்தகத்தின்  ரத்தக்கறை மிகுந்த பக்கங்கள் இன்றும் உலகில் நிலவி வரும் சில ஆதிக்க சக்திகளால் தான் எழுதப்பட்டன. ஆனாலும் தங்கள் வல்லமைகளால் நல்லவர்கள் போன்று உலகின் முன்னால் காட்சி தருவதற்கு இவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.

 
ஆக்கிரமிப்புக்கு எதிராக களம் கண்டார் அப்துல் காதிர். வயது வெறும் 22. போர்க்கள அனுபவம் ஏதுமின்றி களத்தில் குதித்து அன்றைய கொடுங்கோல் வல்லரசுகளில் ஒன்றான பிரான்சை எதிர்த்துப் போரிடும் இமாலயப் பணி . ஆனாலும் உறுதி பூண்டார். களம் கண்டார்.  தனித்தனி குழுவாக இருந்த அனைத்துப் பழங்குடி மக்களையும் ஒன்றிணைத்து ஒரு கொரில்லாப் படையை அமைத்தார்.இதுவே முதல் வெற்றி !!  இந்தக் குழுவின் தலைவராக இருந்ததால் தான் "அமீர்" என்ற அடைமொழி பெயருடன் ஒட்டிக்கொண்டது.

1842 வரை தொடர்ந்த தாக்குதல்களில் நிறைய இடங்களில் கொரில்லாப் படைகள் வெற்றிவாகை சூடின. ஆனாலும் பிரஞ்சுப் படைகள் பல்வேறு சூழ்ச்சிகளைச்  செய்து கொரில்லாக்களைத் தோற்கடித்தது.நிறைய இடங்களில் கொரில்லாக்களுடன்
செய்த சமாதான உடன்படிக்கைகளை மீறி தாக்குதல் நடந்தது. நவீன ஆயுதங்களும் பணபலமும் படைபலமும் கொண்ட ஒரு வல்லரசை எதிர்த்து எத்தனைநாள் பழங்குடிகளால் தாக்குப் பிடிக்க முடியும்? சக்திமிக்கவன் தானே வரலாற்றை நிர்ணயிப்பது; அதுவே இங்கும் நடந்தது. கொரில்லாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

சில வருடங்கள் சிறையில் அடைக்கப்படிருந்தார் அப்துல் காதிர். பின்னர் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து டமாஸ்கஸ் நகருக்கு
நாடு கடத்தப்பட்டார். அல்ஜீரியா பிரஞ்சுக் காலனி நாடு ஆனது.
 

நடந்து முடிந்த போரின்போது அப்துல் காதிரின் படைகளுக்கும் பிரஞ்சுப் படைகளுக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாட்டை ஒரு வரலாற்றாசிரியர் இப்படிச் சொல்கிறார்.
"At a time when the French were mutilating Arab prisoners, wiping out whole tribes, burning men, women, and children alive; and when severed Arab heads were regarded as trophies of war--the Emir manifested his magnanimity, his unflinching adherence to Islamic principle [by refusing] to stoop to the level of his 'civilized' adversaries.'"
அரேபியக் கைதிகளின் உடல்களைச் சிதைப்பது, பழங்குடிக் குழுக்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிவது, ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை உயிருடன் எரிப்பது, தலைகளைக் கொய்து அதை வெற்றிச் சின்னமாய் கருதுவது என்று பிரான்ஸ் தனது அழிச்சாட்டியத்தை காட்டியது. ஆனால் இஸ்லாமிய போர் நெறிமுறைகளைப் சரிவரப் பின்பற்றிய  அமீர் தனது "நாகரீக" எதிரிகளைப் போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்ளாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.

இவ்வளவு ஏன், ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் வந்தபோது தன்னிடம் கைதிகளாக உள்ள பிரஞ்சுப் படை வீரர்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாமல் போனபோது அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து விட்டார். அதற்கு முன்னரோ பின்போ போரில் நடக்காத இந்த அரிய நிகழ்வை வரலாறு இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துள்ளது. போர்க்கைதிகளை எப்படி நடத்துவது என்பது பற்றிய ஜெனீவா தீர்மானங்களுக்கும் முந்தைய நிகழ்வுகள் இவை என்பது மிக முக்கியம் இங்கே !!!  

**********
In 1841, the bishop of Algiers, Antoine-Adolphe Dupuch, wrote to Abd el-Kader asking him to free a French prisoner: “You do not know me, but my calling is to serve God and to love all men as His children and as my brothers.... I have neither money nor gold and can offer in return only the prayers of a sincere soul.” He ended with the Biblical quotation, “Blessed are the merciful, for they shall obtain mercy.”
 1841 ஆம் ஆண்டு அப்துல் காதிரிடம் இருந்த பிரஞ்சுக் கைதி ஒருவரை விடுதலை செய்யக் கோரி அல்ஜீரிய பிஷப் ஒருவர் எழுதிய கடிதத்தில் " என்னை உங்களுக்குத் தெரியாது. எனது இறைப் பணி என்பது கடவுளுக்கு பணிவிடை செய்வதும் எல்லா மனிதர்களையும் சகோதர்களாக நேசிப்பதும் தான். என்னிடம் பணமோ தங்கமோ இல்லை தருவதற்கு. ஒரு நேர்மையான ஆத்மாவின் பிரார்த்தனைகளைத் தவிர என்னிடம் தர ஒன்றுமில்லை.  "கருணையுள்ளவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என்ற விவிலிய வாக்கியத்துடன் நிறைவடைந்த கடிதத்துக்கு அமீர் இப்படி பதில் எழுதினார் 
“You should have asked me not for the freedom of only one, but of all the Christians who are imprisoned. Further, would you not have been twice as worthy of your mission had you asked not only for the liberation of two or three hundred Christians, but also offered to extend the same favor to an equal number of Muslims who languish in your prisons? It is written, ‘Do unto others as you would have them do unto you.’”  

 
சிறைபட்டிருக்கும் ஒரு கிறித்தவரின் விடுதலையை மட்டுமே நீங்கள் கோரி இருக்கக் கூடாது. எல்லா கிறித்தவர்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கோரி இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேலே சென்று, இருநூறு அல்லது முன்னூறு கிறித்தவர்களை மட்டுமல்ல அதே போன்று பிரஞ்சு ராணுவத்தால்  சிறையில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கூறி இருந்தால் உங்கள் இறைப்பணி இன்னும் இருமடங்கு பலனுள்ளதாய் ஆகி இருக்குமே. விவிலியத்தில் தானே இதுவும் இருக்கிறது " மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதனை நீ அவர்களுக்குச் செய் " என்று முடித்திருந்தார்.
**********

இந்த வீரர்களை மீட்கும் பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருந்த வேளையில் பிரஞ்சு தளபதிகள் முதல் முதலாக அப்துல் காதிர் அவர்களை  நேரில் கண்டு அவரது எளிமையைக் கண்டு வியந்து போனார்கள். பக்கம் பக்கமாக அவர் பற்றி அவர்கள் பாடிய புகழ் வரிகளுக்கு வரலாறு சாட்சி. 


ஒரு உதாரணம் இங்கே 


//“The redoubted chief was dressed as a simple sheikh,” he wrote, “in an ordinary haik, a white burnoose, and a cord of camelhair passed round his head. At the slightest mention of religion, his eyes fall, and then are raised gravely towards heaven in the manner of one inspired.”// 
//When he was finally defeated and brought to France, before being exiled to Damascus, the Emir received hundreds of French admirers who had heard of his bravery and his nobility; the visitors by whom he was most deeply touched, though, were French officers who came to thank him for the treatment they received at his hands when they were his prisoners in Algeria.//

டமாஸ்கசுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னால் அமீரை சந்தித்த நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நன்றிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர்களில் அப்துல் காதிர் அவர்களிடம் கைதியாகப் பிடிபட்டு நல்ல முறையில் நடத்தப்பட்ட பிரஞ்சு ராணுவ அதிகாரிகளும் அடக்கம்.  
நாடுகடத்தப்பட்டு டமாஸ்கஸ் நகரில்  வாழ்ந்து கொண்டிருந்த அப்துல் காதிர் அங்கும் சில சவால்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. 1860 ஆம் ஆண்டு. உதுமானியப் பேரரசின் அப்போதைய கவர்னராக இருந்த உமர் பாஷாவின் ஆளுகையில் கிறித்தவர்களுக்கு எதிராக பெரும் கலகம் ஏற்ப்பட்டது. ஷியாக்களில்  ஒரு பிரிவினரான துருஸே முஸ்லிம்கள் கிறித்தவர்களை தாக்கினார்கள். அநியாயமாக எந்தக் கிறித்தவனும் கொலை செய்யப்படுவதை நான் வேடிக்கை பார்க்க முடியாது என்று அறிவித்த அப்துல் காதிர் ஒரு படை திரட்டி கிறித்தவர்களை பாதுகாக்கும் பணியில் இறங்கினார்.

தனது நாட்டை அடிமைப்படுத்தி, தன்னை போரில் தோற்கடித்து சிறையில் அடைத்து நாடு கடத்தியவர்கள் தானே இவர்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை அவர். நியாயத்துக்கு குரல் கொடுப்பவர்களில் ஒருவராக மாறினார். உதுமானியப் பேரரசின் அரசருக்கு தகவல் அனுப்பினார். படை திரட்டி 12000 க்கும் மேற்பட்ட கிறித்தவர்களைக் காப்பாற்றினார் என்று வரலாறு கூறுகிறது. Citadel of Damascus என்ற கோட்டையில் அவர்களைத் தங்க வைத்து பாதுகாத்தார். உலகம் முழுவதும் பரவிய இந்தத் தகவலில் நெகிழ்ந்துபோனார்கள் கிறித்தவர்கள். கூனிக் குறுகிப் போனது பிரஞ்சு அரசாங்கம். அவரது மனித நேய நடவடிக்கைக்காய் ஆயிரக்கணக்கில் மக்களை பாதுகாப்பாய் இடம் பெயர்த்த ஜிஹாதுக்காக பிரஞ்சு அரசின் மிக உயரிய விருதான  Grand Cross of the Légion d'honneur அவருக்கு அறிவிக்கப்பட்டது.
 
தங்களுக்கு எதிராகப் போர் தொடுத்து தங்களால் நாடு கடத்தப்பட்ட ஒருவருக்கே தனது நாட்டின் உயரிய விருதை வழங்கும் நிகழ்வு வரலாற்றில் மிக அரிதே. அது இங்கே நடந்தது. பக்கம் பக்கமாக பிரஞ்சு மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இந்த ஜிஹாதை வர்ணித்து எழுதின.
 

இதோ சர்ச்சிலின் வார்த்தைகள் மட்டும் சாம்பிளுக்கு:

"All the representatives of the Christian powers then residing in Damascus, without one single exception, had owed their lives to him. Strange and unparalleled destiny! An Arab had thrown his guardian aegis over the outraged majesty of Europe. A descendant of the Prophet had sheltered and protected the Spouse of Christ."

காட்டுத்தீயெனப் பரவிய இந்த சம்பவம் அமெரிக்காவை வந்தடைந்தது. என்னது? ஒரு முஸ்லிம் கிறித்தவர்களின் உயிருக்காய் ஜிஹாத் செய்தாரா? என்று நீண்ட கிருதாவை சொறிந்து கொண்டே நம்ப முடியாமல் கேட்டார் அமெரிக்காவின் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன். பாராட்டுக் கடிதமும்  சில துப்பாக்கிகளும் அன்பளிப்பாக லின்கனிடமிருந்து அனுப்பப்பட்டது. இன்றும் அந்தத் துப்பாகிகள் அல்ஜீரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 





 


அமெரிக்கர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றார்கள். அயோவா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரத்துக்கு அப்துல் காதிரின் பெயர் சூட்டப்பட்டது.

//
They named the new village Elkader after Abd el-Kader, a young Algerian hero who led his people in a resistance to French colonialism between 1830 and 1847.// 

என்று அந்த நகரின் வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 
பார்க்க http://www.elkader-iowa.com/History.html

 அரபுப் பெயர் கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் சந்தேகப் பார்வை பார்க்கப்பட்டு தனிச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டில் , எங்கோ அல்ஜீரியாவிலும் டமாஸ்கசிலும் நீதிக்காய்ப் போராடிய ஒரு தீரரின் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது என்பது விந்தையான விஷயம் தானே !!! 

1. சௌதி அராம்கோ நிறுவனத்தின் WORLD சஞ்சிகையில் மிகச் சுருக்கமாக, அழகாக அப்துல் காதிரின் வரலாறு இருக்கிறது. படிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.

2. விக்கி தளத்தில் அப்துல் காதிர் பற்றிய தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் 


3. U.S. City named after Muslim Hero: Biography of Emir 'Abd al-Qadir

4. ஜான் கீசர் எழுதிய அப்துல் காதிரின் வாழ்க்கை வரலாறு.Commander of the Faithful: The Life and Times of Emir Abd el-Kader (1808-1883)  

5. Reza Shah-Kazemi எழுதிய Recollecting the Spirit of Jihad என்ற கட்டுரையில் நிறைய தகவல்கள் இவர் பற்றி இருக்கின்றன. நேரம் இருந்தால் கண்டிப்பாகப் படியுங்கள் இதைச் சொடுக்கி...

ஆர்க்டிக் பிரதேசம் நோக்கி வந்த ஒரு பள்ளி !!!



இனுவிக் நகரம் (http://en.wikipedia.org/wiki/Inuvik) ...கனடாவின் வடக்குப் பக்கம் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதி. வருடத்தின் பெரும்பகுதி நாட்கள் கொடூரமான குளிர். சில மாதங்கள் மட்டும் கோடைக்காலம். அந்தக் காலத்தில் சூரியன் மறையாது. இரவில் கூட பளிச்சென்று வெயில் அடிக்கும். காலநிலை அங்குமிங்குமாக மக்களை பந்தாடும் பகுதிகளில் ஓன்று.

சுமார் 3500 பேர் வசிக்கும் இந்தப் பகுதியில் சுமார் 100 முஸ்லிம்கள். ஒரு லாரியின் கண்டைனரை ஒரு அறை போன்று மாற்றி அதனை பள்ளிவாசலாக பயன்படுத்தி வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல நிற்பதற்குக் கூட இடம் இல்லை..புதிதாக ஒரு பள்ளிவாசல்  கட்டலாம் என்றால் இங்கே ஆகும் செலவு மிக மிக அதிகம்..பொதுவாக வட அமெரிக்காவில் நிறைய பகுதிகளில் கட்டுமானச் செலவுகள் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. இத்தனைக்கும் வீடோ அலுவலகமோ அல்லது பள்ளிவாசலோ எதுவாக இருந்தாலும் மரத்தால் தான் கட்டுவார்கள். ஆனாலும் செலவு ரொம்ப அதிகம்..

பெருகும் மக்களுக்கு ஏற்ப ஒரு பள்ளிவாசல் அமைக்க முடியவில்லை என ஏங்கியவர்களுக்கு ஆறுதலாக ஒரு நிறுவனம் சுபச் செய்தி சொல்லியது. கனடாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு அறக்கட்டளை பள்ளிவாசலை sponsor செய்வதாகச் சொல்லியது..ஆனாலும் அவர்களின் பட்ஜெட்டுக்கு ஆர்க்டிக் பகுதியில் கட்டுமானம் செய்யும் அளவுக்கு வசதி இல்லை..ஏனெனில் அவர்கள் கொடுக்க நினைத்திருந்த தொகையை விட கட்டுமானச் செலவு அதிகம்...என்ன செய்வது என்று யோசித்தவர்களுக்கு ஒரு ஐடியா.

இங்கேயே நமது பகுதியிலேயே மஸ்ஜிதை கட்டி ஆர்க்டிக் பகுதிக்கு எடுத்தச் செல்லலாம் என்பது தான் அந்த ஐடியா...ஆகா..என்னமா ப்ளான் பண்றாங்க...

சிக்கல் ஆரம்பம்..வெறுமனே தரை வழி இனுவிக் பகுதியை அடைய முடியாது..தரை வழி அப்புறம் நீர் வழி என்று மாறி மாறிச் செல்ல வேண்டும்..அதிலும் குளிர் காலம் ஆறுகள் உறைந்து பனிப்பாலையாக மாறிவிடும். அதுவழியே செல்ல வேண்டும்...ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள்..இது போன்று ஒரு structure இங்கிருந்து அங்கு சென்று சேர்ந்திருக்கிறதா என்றும் தெரியவில்லை...கட்டுமானம் நடக்கும் வின்னிபெக்-இல் இருந்து மஸ்ஜித் நிறுவப்படவேண்டிய இனுவிக் செல்ல சுமார் 4500 கிலோமீட்டர்கள் :) :)






சரி முடிவெடுத்து விட்டார்கள்..பள்ளிவாசல் கட்டப்பட்டது. முடிந்த பின் பயணம் ஆரம்பம்.எதிர்பார்த்ததுபோலவே நிறைய logistics பிரச்னைகள். எடுத்துச் செல்லப்படும் structure ஐ விட குறுகிய பாலங்கள். அப்புறம் சாலைப் பயணம் முடிந்து கப்பலோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு barge-இல்(barge என்றால் ஒரு அம்மாம் பெரிய பரிசல் என்று வைத்துக் கொள்ளுங்கள் :) ..படம் கீழே )  கொண்டு வைக்கவேண்டும் நீர் வழிப் பயணத்துக்கு.






                                        ரொம்ப ஈசியான ஒரு சாலைப்பயணம் :)



 பாலத்தை விட வண்டியில் இருக்கும் லோடு பெருசு..என்ன பண்றது ..பாலத்தை கொஞ்சம் tinkering பண்ண வேண்டியது தான்


எல்லா சவால்களும் தாண்டி சரித்திரப் புகழ்மிக்க அந்த 4500 கிலோமீட்டர் பயணம் முடிந்து மஸ்ஜித் ஆர்க்டிக் பிரதேசம் வந்தடைந்தது. ஊருக்கு ஏற்ற மாதிரியே "Midnight Sun Mosque" (நள்ளிரவுச் சூரியன் பள்ளிவாசல் ) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் :)

மீடியா நன்றாக கவர் செய்த இந்த சரித்திரப் புகழ் மிக்க பயணத்தை இரு சகோதரிகள் நிலோபர் ரஹ்மான் மற்றும் அவரது சகோதரி சைரா ரஹ்மான் இருவரும் துவக்கம் முதல் இறுதி வரை படம் பிடித்திருக்கிறார்கள். அதனை ஒரு ஆவணப்படமாக வெளியிட இருக்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் .தற்போது நிதிவசதி இல்லாமல் இந்த முயற்சி முடிவடையாமல் இருக்கிறது.

அதற்காக வெளியிடப்பட்ட இந்த trailer பாருங்கள்..அட்டகாசம் :)






பயணத்தின் முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு காணொளியாக இங்கே




இனுவிக் நகர official வலைத்தளத்தில் கூட அவர்கள் வெளியிட்ட கையேட்டில் சுற்றுலா இடமாக இதனை அறிவித்திருக்கிறார்கள். In page 19

நிலோபோர் சைரா சகோதரிகளின் வலைத்தளம்

தொடர்புடைய பத்திரிகைச் செய்தி



ஒருவழியாக பள்ளிவாசல் நிறுவப்பட்டு பூமியின் துருவப்பகுதிகளில் மிக தொலைதூரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் என்ற பெருமையை கொண்டுள்ளது...மாஷா அல்லாஹ் !!!

நம்பினால் நம்புங்கள். 100 கிலோமீட்டர் ஓடும் விந்தை மனிதர்கள் ! !


26 மைல் (42 கிலோமீட்டர்) தூரம் வீரர்கள் ஓடும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நீண்டதூரம் ஓடினாலும் இவர்கள் நடக்கிறார்களா அல்லது ஓடுகிறார்களா என்று சந்தேகம் வரும் அளவுக்கு மெதுவாக ஓடுவார்கள். நான் சொல்வது இவர்கள் பற்றி அல்ல. இன்னொரு வகையான் மாரத்தான் வீரர்கள் குறித்து. இவர்கள் 100 கிலோமீட்டர் தூரத்தை கூட அனாசயமாக கடப்பார்களாம். அவ்வளவு உடல் வலிமை. உடல் உறுதி.

மெக்ஸிகோ நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியான "சிஎர்ரா மாடரே" (Sierra Madre) பகுதிகள், அதை ஒட்டிய "தாமிர ஆற்றுக்குடைவு" (Copper Canyon )பகுதிகளில் வசிக்கும் "டராஹுமாரா" (Tarahumara) என்ற பழங்குடியின மக்கள் தான் நான் மேலே சொன்ன 100 கிலோமீட்டர் தூரம் ஓடும் அசகாய சூரர்கள்.

நீண்டகாலமாக பக்கத்து கிராமங்களுக்கு உணவுக்காகவும் தகவல் சொல்லவும் இன்னபிற எல்லா தேவைகளுக்கும் இந்த மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் வந்து சேர்ந்த ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் தற்போதைய தென் மற்றும் வட அமெரிக்கப் பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடிகளை கொன்றொழித்தனர். இன்கா (Inca ), மாயன் போன்ற பழங்குடிகள் அழிக்கப்பட்டனர். அந்த இனப்படுகொலையில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்தப் பழங்குடியினர் மெக்ஸிகோவின் இந்த அபாயகரமான மலைப்பகுதிகளில் குடிபுகுந்துள்ளனர் . பின்னர் அதுவே அவர்களின் முகவரி ஆகிப்போனது.

டராஹுமாரா பழங்குடி மக்கள்




 இந்தப் பழங்குடியினர் ஓடுவதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் இருக்கிறது. சாதாரண மாரத்தான் பந்தயங்களில் ஓடுபவர்கள் வசதி மிக்க காலணிகள் அணிந்து ஓடுவார்கள். இந்தப் பழங்குடி மக்களிடம் அது இல்லை. வெறும் காலுடன் எவ்வளவு பெரிய தூரத்தையும் ஓடிக்கடக்கிறார்கள். சிலநேரங்களில் மான்தோலில் செய்த மிக மெல்லிய காலணியை தங்கள் காலுடன் இறுகக் கட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். கீழே இருக்கும் படத்தை பாருங்கள் புரியும்





இந்த மக்கள் வசிக்கும் காட்டுப்பகுதிகள் மரத்தேவைகளுக்காக அழிக்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு கடுமையான பஞ்சத்தில் தவிக்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக சோழம் மற்றும் பீன்ஸ் பயிரிட்டு வந்த இந்த மக்கள் கடும் வெயிலினால் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் நாசமாகி பஞ்சத்தில் தவிக்கிறார்கள். கடும் உடல் பலம் பொருந்திய இந்த மக்கள் பஞ்சத்தில் ஆழ்ந்தபோது மற்றொரு மாபெரும் சூழ்ச்சி இவர்களை  சூழ்ந்துகொண்டிருந்தது . அநியாயம் என்னவென்றால் அந்த சூழ்ச்சியை இவர்கள் அறியாமல் இருந்தார்கள். என்னவென்று சொல்கிறேன் கீழே

மெக்ஸிகோ உலகின் போதைப்பொருள் வணிகர்களின் தலைமையகம். உலக அளவில் போதைப்பொருள் குற்றங்களுக்காகத் தேடப்படும் நபர்களின் பட்டியலில் எப்போதுமே மெக்ஸிகோவில் இருந்து சிலபேர் முதலிடத்தில் இருப்பார்கள். அந்த அளவுக்கு போதைப்பொருள் வணிகம் செழித்துக் கொழிக்கும் இடம் அது, இந்த போதைப்பொருள் வணிகர்களின் சூழ்ச்சிக்கண்ணில் சிக்கினர் இந்தப் பஞ்சத்தில் சிக்கிய டராஹுமாரா பழங்குடியினர்.

மெக்ஸிகோவுக்கு வட பகுதியில் தான் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்கா கடுமையான சட்ட விதிகளைக் கொண்ட நாடு. போதைப்பொருளை அத்துமீறி கடத்திக் கொண்டு சென்று அங்கே விற்பது சிரமம் இந்த போதைப்பொருள் மாபியா கும்பலுக்கு. எல்லைப்பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறை கண்ணில் எண்ணெய் விட்டு காத்திருக்கும் இது போன்று கடத்திக் கொண்டு வருபவர்களை.



மெக்ஸிகோவின் வடபகுதியில் உள்ள பாலைவனப்பகுதியை கடந்தால் அமெரிக்காவில் நுழையலாம். நீண்ட நெடிய நீளம் கொண்ட பாலைவனத்தைக் கடப்பது எப்படி?

இங்கேதான் கிரிமினல் எண்ணம் கொண்ட போதைப்பொருள் மாபியாவின் கைகளில் சிக்கின டரகுஉமாரா பழங்குடி மக்கள். உங்களுக்கு சாப்பிடத் தருவோம். ஒரே ஓட்டத்தில் ஓடி பாலைவனத்தைத் தாண்டி அமெரிக்காவில் காத்திருக்கும் எங்கள் agent கையில் இந்தப் பையை ஒப்படைக்க வேண்டும். 50 பவுண்டு பையை தூக்கி கொண்டு பாலைவனத்தை தாண்டி ஒரு 50 மைல் ஓடுவது என்பது டராஹுமாரா மக்களைப் பொறுத்தவரை நாம் மார்கெட்டுக்கு காய்கனி வாங்க செல்வது மாதிரிதான். ஓடினார்கள். போதைபொருள் பொட்டலத்தை ஒப்படைத்து திரும்பினார்கள்.

“You get a guy who can go 50 miles with almost no water .." says McDougall, author of Born to Run.
தண்ணீர் கூட குடிக்க அவசியமில்லாமல் 50 மைல் ஓடும் ஒரு மனிதன் இலவசமாகக் கிடைக்கிறான். என்கிறார் இந்தப் பழங்குடிகள் பற்றி Born to Run என்ற புத்தகத்தை எழுதிய  McDougall

சிலகாலம் கடத்தல் நன்றாகவே சென்றது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற சொல் மாதிரி border protection போலீசால் சிலகாலம் சென்று  கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜரானபோது இவர்களுக்காக வாதாட யாருமில்லை. ஏனெனில் இவர்கள் பேசும் பழங்குடியின மொழியை வேறு எவரும் உலகில் அறிந்திருக்கவில்லை. இவ்வளவு ஏன் இவர்களுக்கு நவீன் நாணய முறை அல்லது கரன்சி முறை கூட பழக்கமில்லை. கூலி எல்லாம் சோழம் தான். பொட்டலத்தை ஒப்படைத்து திரும்பினால் சோழம் கிடக்கும். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரியும்.

வாதாட யாரும் இல்லாததால் அமெரிக்க நீதிமன்றம் இவர்களை முதலில் விடுதலை செய்தது. மீண்டும் மீண்டும் இவர்கள் அகப்படவே இப்போது இந்த மொழி தெரிந்த ஒருவரை நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கிறது. இப்போது கைது செய்யப்படுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

தானும் அழிந்து தனது சுற்றத்தையும் நட்பையும் அழிக்கும் கொடூர ஆட்கொல்லிதான் போதைப்பொருட்கள். தான் கொண்டு செல்லும் பொருள்  என்னவென்றே தெரியாத அப்பாவிகளைக் குருவிகளாகப் பயன்படுத்தி தங்கள் வியாபாரங்களை பெருக்கநினைக்கும் இந்த நச்சு வியாபாரிகள் சமூகத்தில் இருக்கும்வரை நிம்மதி இல்லை.

//Camilo Villegas-Cruz is wistful when he talks about happier times, running in the shadowy depths of Sinforosa Canyon, in Mexico’s lawless Sierra Madre. A member of the Tarahumara Indian tribe, renowned for their agility and running endurance, Villegas-Cruz grew up competing in traditional rarajipari races, in which contestants kick a wooden ball along a rocky trail. But by the time he was 18 years old, he was running an entirely different kind of race—hauling a 50-pound backpack of marijuana across the border into the New Mexico desert.

Today, Villegas-Cruz is 21 and languishing in a U.S. federal prison near the Mojave Desert in Adelanto, Calif.

“Someday,” he says, dressed in a prison uniform and sitting in a large room usually used for court proceedings, “I’ll get home and I’ll never come here again.”
//

கலிபோர்னியாவில் சிறையில் இருக்கும் 21 வயதான ஒரு பழங்குடி இளைஞன் இனியொருமுறை நான் வீட்டுக்கு சென்றால் திரும்பி இங்கே வரவேமாட்டேன் என்று சொன்னதாக மேற்குறிப்பிட்ட பத்தியில் பத்திரிகையாளர் சொல்கிறார். அவனது வீடு திரும்பல் சாத்தியமா?


மேலும் படிக்க :

1. இவர்களின் ஓடும் திறன் குறித்து discovery சேனல் வெளியிட்ட ஆவணப்படம்.


2. http://www.thedailybeast.com/newsweek/2012/06/24/mexican-drug-war-s-next-victims-tarahumara-indian-runners.html

3. http://en.wikipedia.org/wiki/Tarahumara_people

4. http://ngm.nationalgeographic.com/2008/11/tarahumara-people/gorney-text

5. இன்று இந்த பழங்குடியினரை பாதுகாக்க சில அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத்தொண்டர்கள் எடுத்து வரும் முயற்சிகள். அவர்களுக்கு மத்தியில் ஓட்டபந்தயம் நடத்தி சோளத்தைப் பரிசாகக் கொடுக்கிறார்கள். வயதான பெண்கள்கூட அனாசயமாக கல், மண், ஆறு எல்லாம் கடந்து 75 கிலோமீட்டர்கள் கடந்து போட்டியை நிறைவு செய்வதை பார்க்கலாம் :)