Showing posts with label Charity. Show all posts
Showing posts with label Charity. Show all posts

அறிமுகமில்லாத நபரால் செய்யப்படும் உதவி -இது கற்பனை அல்ல!

*அழகான ஒரு ஞாயிற்றுக்கிழமை. நகரின் பிரதான உணவு விடுதி ஒன்றில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த உணவு பதார்த்தங்கள் சாப்பிட்டு நன்றாக ஏப்பம் விட்டு "பில் குடுப்பா " என்று கேட்கிறீர்கள். பில் பார்த்த உங்களுக்கு பேரதிர்ச்சி. பில்லில் நீங்கள் செலுத்தவேண்டிய மொத்த தொகை ஜீரோ என்று பிரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது :)

ஏன் எனது பில் ஜீரோ என்று வருகிறது என்று உணவக சிப்பந்தியிடம் கேட்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் இந்த மேசையில் அமர்ந்து சாப்பிட்டு சென்றவர் உங்கள் தொகையை தந்துவிட்டார். விரும்பினால் இன்னொருவருக்கு நீங்கள் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம். இதோ உங்கள் ஸ்மைல் கார்டு என்கிறார் சிப்பந்தி :)

*உங்களுக்கு முன்னாள் சுங்கச்சாவடியில் நிற்கும் கார்க்காரன் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறான்(அதிகமில்லை..சில நிமிடங்கள் தான் ) அவனது தொகையை செலுத்தி ரசீது வாங்க!  அவனுக்கும் எங்கோ விரைந்தாக வேண்டும் என்பதுபோலவே உங்களுக்கும் எங்கோ பறந்தாக வேண்டும். கடுப்படித்து அவன் சென்ற பின்னர் நீங்கள் சென்று நிறுத்தி உங்களுக்கான toll தொகையை கவுண்டரில் இருப்பவரிடம் கொடுக்கிறீர்கள். கவுண்டரில் இருப்பவர் உங்களுக்கு ஒரு ஷாக் கொடுக்கிறார். உங்கள் காருக்கான தொகையை முன்னால் சென்ற காரோட்டி கொடுத்துவிட்டார். இந்த ஸ்மைல் கார்டு ஒன்றை உங்களிடம் தரச் சொன்னார் என்கிறார். 

அடடா..இவன் மீதா இத்தனை நேரம் சலித்துக் கொண்டோம் என்று நாக்கை கடித்துக் கொள்கிறீர்கள்.


அட போப்பா...Thanksgiving க்கு நாலு நாள் விடுமுறை ..நன்றாகத் தூங்கினால் இப்படியான கனவுகள் சகஜம் தான் என்கிறீர்களா?
வெயிட் எ மினிட் சகோஸ்!!! நான் சொல்வது உண்மை. நிஜம். நடந்தது! நடப்பது!

உனக்காக நான் அழ வேண்டுமென்றால் கூட நீ எனக்குப் பணம் தர வேண்டும் என்கிற முதலாளித்துவ சித்தாந்தத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் அமெரிக்காவில் தான் நடக்கின்றன இதெல்லாம்.

திருப்பி நீங்கள் எதையும் தராவிடினும் நாங்கள் எங்களால் எது முடியுமோ அதனை செய்வோம் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து செயல்படும் ஆயிரகணக்கான தன்னார்வ தொண்டர்கள் தான் இது போன்ற ஒரு புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

எதையும் எதிர்பார்ப்பதில்லை இவர்கள். தங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அடுத்தவர்களையும் இதுபோன்று செய்யச் சொல்லி ஊக்குவிக்கிறார்கள். கொடுத்தவர் யாரென்றே தெரியாது. ஆக நன்றிக்கடன் என்பதே இங்கே இல்லை. யாரென்று தெரிந்தால் தானே நன்றி சொல்ல. ஆக திருப்பிக் கொடு ( Pay back ) என்பதே இல்லை. வேறு வழி இல்லை. Pay it Forward தான் :) . நமக்கு யாராலோ நடந்தது போன்று நம்மால் வேறு யாருக்கோ இப்படி நடக்கவேண்டும் என்று நினைப்போம்!


இந்த தன்னார்வ குழுமத்தின் முக்கிய பிரமுகர் நிபுன் மேத்தா ( Nipun Mehta ). தங்களின் செயல்களின் நோக்கமும் விளைவும் குறித்து சுருக்கமாக இப்படிச் சொல்கிறார்.

at its core, it is a shift from

consumption to contribution

transaction to trust

scarcity to abundance

and isolation to community


இதன் மையக்கருத்து ஏதெனில்
நுகர்வில் இருந்து பகிர்வை நோக்கியும்
கொடுக்கல் வாங்கலில் இருந்து நம்பிக்கையை நோக்கியும்
பற்றாக்குறையில் இருந்து நிறைவை நோக்கியும்
தனிமையில் இருந்து குழுமத்தை நோக்கியும்
பயணிப்பது தான் என்கிறார்.

இந்த வருடத்தின் சிறந்த Commencement உரைகளில் ஒன்றை நிபுன் மேத்தா பென்சில்வேனியா பல்கலையில் நிகழ்த்தினார். "Paths Are Made By Walking" நடப்பதால் புதிய பாதைகள் உருவாகிறது என்ற தலைப்பில் நிபுன் தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அதிலிருந்து சில பகுதிகளை தமிழில் தருகிறேன்...

நான்கு வருடங்களுக்கு முன்பு எப்படி இந்த பல்கலைக்குள் நடந்து வந்தீர்களோ அதுபோலவே நடந்து எல்லையற்ற வாய்ப்புகளை வைத்திருக்கும் இந்த உலகுக்கும்  செல்லுங்கள். இந்த அதிவேக உலகில் நடப்பது என்பதே அரிதாகி விட்டது. பாதசாரி(Pedestrian ) என்பதே சாதாரண ஒரு விஷயத்தை சொல்வது போல் ஆகிவிட்டது. 

ஒரு நல்ல எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு நடப்பதற்கு ஆழமான வேர்கள் உண்டு. உலகின் பல மதங்களிலும் கலாச்சாரங்களிலும் இது காணப்படுகிறது .அப்படி நடப்பது ஒரு புனிதப் பயணமாக கருதப்படுகிறது.
2005 ம் ஆண்டு..திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகி இருந்த நிலையில் நானும் எனது மனைவியும் இது போன்று நடந்து ஒரு புனிதப்பயணம் செல்வது என்று முடிவு செய்தோம். ஒரு நாளுக்கு அதிகபட்ச செலவு 1 டாலர் தான் செய்வதென்று முடிவு செய்தோம். மற்ற எல்லா தேவைகளுக்கும் வழி நெடுக முகமறியாத அன்னியர்களைச் சார்ந்து இருப்போம். வழியில் யாராவது சாப்பிடக் கொடுத்தால் சாப்பிடுவோம் இல்லையெனில் பசித்துக்  கொண்டே நடப்போம். அதுபோலவே தங்குவதும். யாராவது தங்க இடம் தந்தால் தங்குவோம். இல்லையெனில் சாலையோரம் தூங்குவோம்.
இப்படியே 1000 கிலோமீட்டர்கள் நடந்தோம். மனிதர்களின் மிகச்சிறந்த குணங்களையும் மோசமான குணங்களையும் பாதையெங்கும் காண முடிந்தது,

இந்தப் பயணத்தில் பார்த்த சில விஷயங்களும் அது ஏற்படுத்திய வியப்புகளும் தனிச்சிறப்பானவை

1. கிராமவாசிகளின் வாழ்க்கை. எது கிடைத்தாலும் மீண்டும்  மீண்டும்  வேறொன்று வேண்டும் என்று கேட்கும் நகரவாசியைப் போலல்லாமல் கிடைப்பதை வைத்து திருப்தி அடைந்து கொள்கிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கு மிக சுலபமாக இருக்கிறது. ஒரு கிராமத்து விவசாயி என்னிடம் சொன்னார். "மழையோ வெயிலோ அது இயற்கையின் பரிசு. கிடப்பதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று.". நம்மைச் சுற்றி இருப்பவை பரிசுப் பொருட்கள் என்ற எண்ணம் வந்துவிட்டதால் எல்லாவற்றையும் அணுகும் முறையே வேறுபட்டதாக இருக்கிறது. 
        தனது பிள்ளைகளை அழைத்துச் செல்வது போல மாட்டை அழைத்துச் செல்லும் விவசாயி. 
      எப்போதாவது தனது கிராமத்துக்கு வரும் பேருந்துக்காக மூன்று மணி நேரம் காத்திருக்கும் பெண்மணி. இவர்களின்  முகத்தில் எந்தக் கோபமும் ஆத்திரமும்  இல்லை.

2. கிராமங்களைக் கடந்து செல்லும்போது அவர்களின் உண்மையான அன்பைப் புரிந்துகொள்ள முடிந்தது.தங்களுக்கு உண்ண நல்ல உணவு இல்லையெனினும் எங்களுக்குத் தருவதற்காக மற்ற வீடுகளில் இருந்தெல்லாம் உணவுகள் வாங்கி வரப்பட்டன சில சமயங்களில். "விருந்தினர் கடவுள் மாதிரி" எனவே மறுக்காமல் சாப்பிடுங்கள் என்று சொல்லி உணவு பகிர்ந்தார்கள்.

3. கடுமையான தாகத்தில் நடந்து கொண்டிருந்தபோது அருந்த தண்ணீர் தந்த ஒரு பெண்மணியை எங்களால் மறக்க முடியாது. பின்னர் தெரிந்து கொண்டேன் ஒரு விஷயத்தை. ஒரு வாளி  குடி தண்ணீர்  எடுக்க அதிகாலை 4 மணிக்கு எழுந்து அந்தப் பெண்மணி 10 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டுமாம்.

இதுபோன்ற பல சுவாரசியங்களுடன் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நிபுன் ஆற்றிய முழு உரையை படிக்க இங்கே சுட்டுங்கள்.

நிபுன் மற்றும் அவரது குழு செய்யும் செயல்கள் வித்தியாசமாய் இருக்கிறது. உதாரணம் dailygood என்ற பத்திரிகை. தினம் தினம் மனதுக்கு தெம்பூட்டும், புத்துணர்வு தரும் செய்திகளை மட்டுமே பிரசுரிக்கும் பத்திரிகை இது :)

Three Stages of  generosity என்ற தலைப்பில் TEDx நிகழ்ச்சியில் நிபுன் ஆற்றிய உரையில் இன்னும் பல சுவாரசியங்களை தொகுக்கிறார். அவரது உரையை கேட்க இங்கே சுட்டுங்கள்.

முதலாளித்துவத்தை கைவிடாது வாழும் மேற்கத்தியர்களுக்கு இந்த தகவல்கள் புதியதாக இருக்கலாம். இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகள் மூலமாக் அன்பையும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதையும் பலமுறை படித்த நாம், அன்பளிப்பு மற்றும் தான தர்மங்களின் தாத்பர்யத்தை உணர்ந்த நாம்  அதனை எவ்வாறு எப்படி எப்போது செயல்படுத்தப் போகிறோம்?

NB :

1. ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல் என்ற தலைப்பில் சகோ.ஆஷிக் எழுதிய இந்தப் பதிவையும் படியுங்கள்

2.   www.servicespace.org
     www.karmakitchen.org
     www.dailygood.org
     www.karmatube.org

என்ற நிபுனின் எல்லா திட்டங்களுமே வித்தியாசமானதாக இருக்கிறது. கொஞ்சம் மேய்ந்து பாருங்கள்.

----------------------------- 
முக்கிய அறிவிப்பு:இஸ்லாமியப் பெண்மணியில் கட்டுரை போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. முழு விபரம் அறிய    க்ளிக்குக