நம்பினால் நம்புங்கள். 100 கிலோமீட்டர் ஓடும் விந்தை மனிதர்கள் ! !


26 மைல் (42 கிலோமீட்டர்) தூரம் வீரர்கள் ஓடும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நீண்டதூரம் ஓடினாலும் இவர்கள் நடக்கிறார்களா அல்லது ஓடுகிறார்களா என்று சந்தேகம் வரும் அளவுக்கு மெதுவாக ஓடுவார்கள். நான் சொல்வது இவர்கள் பற்றி அல்ல. இன்னொரு வகையான் மாரத்தான் வீரர்கள் குறித்து. இவர்கள் 100 கிலோமீட்டர் தூரத்தை கூட அனாசயமாக கடப்பார்களாம். அவ்வளவு உடல் வலிமை. உடல் உறுதி.

மெக்ஸிகோ நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியான "சிஎர்ரா மாடரே" (Sierra Madre) பகுதிகள், அதை ஒட்டிய "தாமிர ஆற்றுக்குடைவு" (Copper Canyon )பகுதிகளில் வசிக்கும் "டராஹுமாரா" (Tarahumara) என்ற பழங்குடியின மக்கள் தான் நான் மேலே சொன்ன 100 கிலோமீட்டர் தூரம் ஓடும் அசகாய சூரர்கள்.

நீண்டகாலமாக பக்கத்து கிராமங்களுக்கு உணவுக்காகவும் தகவல் சொல்லவும் இன்னபிற எல்லா தேவைகளுக்கும் இந்த மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் வந்து சேர்ந்த ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் தற்போதைய தென் மற்றும் வட அமெரிக்கப் பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடிகளை கொன்றொழித்தனர். இன்கா (Inca ), மாயன் போன்ற பழங்குடிகள் அழிக்கப்பட்டனர். அந்த இனப்படுகொலையில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்தப் பழங்குடியினர் மெக்ஸிகோவின் இந்த அபாயகரமான மலைப்பகுதிகளில் குடிபுகுந்துள்ளனர் . பின்னர் அதுவே அவர்களின் முகவரி ஆகிப்போனது.

டராஹுமாரா பழங்குடி மக்கள்




 இந்தப் பழங்குடியினர் ஓடுவதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் இருக்கிறது. சாதாரண மாரத்தான் பந்தயங்களில் ஓடுபவர்கள் வசதி மிக்க காலணிகள் அணிந்து ஓடுவார்கள். இந்தப் பழங்குடி மக்களிடம் அது இல்லை. வெறும் காலுடன் எவ்வளவு பெரிய தூரத்தையும் ஓடிக்கடக்கிறார்கள். சிலநேரங்களில் மான்தோலில் செய்த மிக மெல்லிய காலணியை தங்கள் காலுடன் இறுகக் கட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். கீழே இருக்கும் படத்தை பாருங்கள் புரியும்





இந்த மக்கள் வசிக்கும் காட்டுப்பகுதிகள் மரத்தேவைகளுக்காக அழிக்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு கடுமையான பஞ்சத்தில் தவிக்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக சோழம் மற்றும் பீன்ஸ் பயிரிட்டு வந்த இந்த மக்கள் கடும் வெயிலினால் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் நாசமாகி பஞ்சத்தில் தவிக்கிறார்கள். கடும் உடல் பலம் பொருந்திய இந்த மக்கள் பஞ்சத்தில் ஆழ்ந்தபோது மற்றொரு மாபெரும் சூழ்ச்சி இவர்களை  சூழ்ந்துகொண்டிருந்தது . அநியாயம் என்னவென்றால் அந்த சூழ்ச்சியை இவர்கள் அறியாமல் இருந்தார்கள். என்னவென்று சொல்கிறேன் கீழே

மெக்ஸிகோ உலகின் போதைப்பொருள் வணிகர்களின் தலைமையகம். உலக அளவில் போதைப்பொருள் குற்றங்களுக்காகத் தேடப்படும் நபர்களின் பட்டியலில் எப்போதுமே மெக்ஸிகோவில் இருந்து சிலபேர் முதலிடத்தில் இருப்பார்கள். அந்த அளவுக்கு போதைப்பொருள் வணிகம் செழித்துக் கொழிக்கும் இடம் அது, இந்த போதைப்பொருள் வணிகர்களின் சூழ்ச்சிக்கண்ணில் சிக்கினர் இந்தப் பஞ்சத்தில் சிக்கிய டராஹுமாரா பழங்குடியினர்.

மெக்ஸிகோவுக்கு வட பகுதியில் தான் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்கா கடுமையான சட்ட விதிகளைக் கொண்ட நாடு. போதைப்பொருளை அத்துமீறி கடத்திக் கொண்டு சென்று அங்கே விற்பது சிரமம் இந்த போதைப்பொருள் மாபியா கும்பலுக்கு. எல்லைப்பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறை கண்ணில் எண்ணெய் விட்டு காத்திருக்கும் இது போன்று கடத்திக் கொண்டு வருபவர்களை.



மெக்ஸிகோவின் வடபகுதியில் உள்ள பாலைவனப்பகுதியை கடந்தால் அமெரிக்காவில் நுழையலாம். நீண்ட நெடிய நீளம் கொண்ட பாலைவனத்தைக் கடப்பது எப்படி?

இங்கேதான் கிரிமினல் எண்ணம் கொண்ட போதைப்பொருள் மாபியாவின் கைகளில் சிக்கின டரகுஉமாரா பழங்குடி மக்கள். உங்களுக்கு சாப்பிடத் தருவோம். ஒரே ஓட்டத்தில் ஓடி பாலைவனத்தைத் தாண்டி அமெரிக்காவில் காத்திருக்கும் எங்கள் agent கையில் இந்தப் பையை ஒப்படைக்க வேண்டும். 50 பவுண்டு பையை தூக்கி கொண்டு பாலைவனத்தை தாண்டி ஒரு 50 மைல் ஓடுவது என்பது டராஹுமாரா மக்களைப் பொறுத்தவரை நாம் மார்கெட்டுக்கு காய்கனி வாங்க செல்வது மாதிரிதான். ஓடினார்கள். போதைபொருள் பொட்டலத்தை ஒப்படைத்து திரும்பினார்கள்.

“You get a guy who can go 50 miles with almost no water .." says McDougall, author of Born to Run.
தண்ணீர் கூட குடிக்க அவசியமில்லாமல் 50 மைல் ஓடும் ஒரு மனிதன் இலவசமாகக் கிடைக்கிறான். என்கிறார் இந்தப் பழங்குடிகள் பற்றி Born to Run என்ற புத்தகத்தை எழுதிய  McDougall

சிலகாலம் கடத்தல் நன்றாகவே சென்றது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற சொல் மாதிரி border protection போலீசால் சிலகாலம் சென்று  கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜரானபோது இவர்களுக்காக வாதாட யாருமில்லை. ஏனெனில் இவர்கள் பேசும் பழங்குடியின மொழியை வேறு எவரும் உலகில் அறிந்திருக்கவில்லை. இவ்வளவு ஏன் இவர்களுக்கு நவீன் நாணய முறை அல்லது கரன்சி முறை கூட பழக்கமில்லை. கூலி எல்லாம் சோழம் தான். பொட்டலத்தை ஒப்படைத்து திரும்பினால் சோழம் கிடக்கும். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரியும்.

வாதாட யாரும் இல்லாததால் அமெரிக்க நீதிமன்றம் இவர்களை முதலில் விடுதலை செய்தது. மீண்டும் மீண்டும் இவர்கள் அகப்படவே இப்போது இந்த மொழி தெரிந்த ஒருவரை நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கிறது. இப்போது கைது செய்யப்படுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

தானும் அழிந்து தனது சுற்றத்தையும் நட்பையும் அழிக்கும் கொடூர ஆட்கொல்லிதான் போதைப்பொருட்கள். தான் கொண்டு செல்லும் பொருள்  என்னவென்றே தெரியாத அப்பாவிகளைக் குருவிகளாகப் பயன்படுத்தி தங்கள் வியாபாரங்களை பெருக்கநினைக்கும் இந்த நச்சு வியாபாரிகள் சமூகத்தில் இருக்கும்வரை நிம்மதி இல்லை.

//Camilo Villegas-Cruz is wistful when he talks about happier times, running in the shadowy depths of Sinforosa Canyon, in Mexico’s lawless Sierra Madre. A member of the Tarahumara Indian tribe, renowned for their agility and running endurance, Villegas-Cruz grew up competing in traditional rarajipari races, in which contestants kick a wooden ball along a rocky trail. But by the time he was 18 years old, he was running an entirely different kind of race—hauling a 50-pound backpack of marijuana across the border into the New Mexico desert.

Today, Villegas-Cruz is 21 and languishing in a U.S. federal prison near the Mojave Desert in Adelanto, Calif.

“Someday,” he says, dressed in a prison uniform and sitting in a large room usually used for court proceedings, “I’ll get home and I’ll never come here again.”
//

கலிபோர்னியாவில் சிறையில் இருக்கும் 21 வயதான ஒரு பழங்குடி இளைஞன் இனியொருமுறை நான் வீட்டுக்கு சென்றால் திரும்பி இங்கே வரவேமாட்டேன் என்று சொன்னதாக மேற்குறிப்பிட்ட பத்தியில் பத்திரிகையாளர் சொல்கிறார். அவனது வீடு திரும்பல் சாத்தியமா?


மேலும் படிக்க :

1. இவர்களின் ஓடும் திறன் குறித்து discovery சேனல் வெளியிட்ட ஆவணப்படம்.


2. http://www.thedailybeast.com/newsweek/2012/06/24/mexican-drug-war-s-next-victims-tarahumara-indian-runners.html

3. http://en.wikipedia.org/wiki/Tarahumara_people

4. http://ngm.nationalgeographic.com/2008/11/tarahumara-people/gorney-text

5. இன்று இந்த பழங்குடியினரை பாதுகாக்க சில அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத்தொண்டர்கள் எடுத்து வரும் முயற்சிகள். அவர்களுக்கு மத்தியில் ஓட்டபந்தயம் நடத்தி சோளத்தைப் பரிசாகக் கொடுக்கிறார்கள். வயதான பெண்கள்கூட அனாசயமாக கல், மண், ஆறு எல்லாம் கடந்து 75 கிலோமீட்டர்கள் கடந்து போட்டியை நிறைவு செய்வதை பார்க்கலாம் :)